அடுத்த 100 ஆண்டுகளுக்கு திட்டமிட்ட வளர்ச்சி! அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அடுத்த நூறு ஆண்டுகளின் தேவைகளை மனதில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடப்பட வேண்டும் என்றும், இதற்காக மாநிலத் தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (எஸ்சிஆர்டிஏ) விரைவில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதன்படி மாநிலத் தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (எஸ்சிஆர்டிஏ) விரைவில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் உத்தரப் பிரதேசத்தின் அடுத்த நூறு ஆண்டுகளின் தேவைகளை மனதில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை திட்டமிடும் என்று கூறப்படுகிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையின் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை தனது இல்லத்தில் நேற்று யோகி ஆதித்யநாத் நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம், எஸ்சிஆர்டிஏவின் செயல் திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதில், லக்னோ, உன்னாவ் , ஹர்தோய் , ரேபரேலி , சீதாப்பூர் மற்றும் பாரபங்கி மாவட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத் தலைநகர் லக்னோவை எஸ்சிஆர்டிஏவின் தலைமையகமாக மாற்றவும், குடிமக்களின் வசதிக்காக பிற மாவட்டங்களில் பிராந்திய அலுவலகங்களைத் திறக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சி வேகமெடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications