"ராமர் கோயிலில் புகுந்த நீர்.. சாலை முழுக்க பள்ளங்கள்.." அயோத்தியில் என்ன தான் நடக்கிறது!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது. இதற்கிடையே ஒரே ஒரு மழைக்கே ராமர் கோயில் உட்புறம் தண்ணீர் லீக் ஆவதாகவும் அதை வெளியேற்றக் கூட வழி இருக்கவில்லை என்றும் கோயில் தலைமை அர்ச்சகர் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இதற்கிடையே இது குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலைத் திறந்து வைத்தார். ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் அமைந்துள்ள இந்த கோயிலை இந்துக்கள் புனிதத் தலமாகக் கருதுகிறார்கள்.

இந்த அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், ஒரு முறை பெய்த மழைக்கே அங்குப் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறதாம்.. இது கோயில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராமர் கோயில்: குறிப்பாக ராமர் கோயிலுக்குச் செல்லும் வகையில் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் பாதை சாலை இந்த பருவ மழையால் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 14 கிமீ தூரமுள்ள அந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் வெளியான உடன் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சாலையை உடனடியாக சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சாலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதாக ஆறு அதிகாரிகளை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மழை நின்றவுடன் நீரை வெளியேற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டதாக அயோத்தி நகர மேயர் கிரிஷ் பதி திரிபாதி தெரிவித்துள்ளார்.
தலைமை அர்ச்சகர்: கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழையின் பின்னர் கோயிலிலும் தண்ணீர் லீக் ஆனதாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை இது தொடர்பாக ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் கூறுகையில், "கோயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து வருகிறது. இதனால் கோயில் வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குகிறது. வளாகத்தில் உள்ள மழைநீரை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.. அதுவே பிரச்சினைக்குக் காரணம்" என்றார்.

புது தகவல்: அதேநேரம் அர்ச்சகரின் இந்த கருத்தை ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஒரு துளி தண்ணீர் கூட சொட்டவில்லை.. கருவறை உட்பட எங்கும் மழை நீர் இல்லை.. கோயிலில் மழைநீர் வடிந்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்க்க அது கூரையில் இருந்து கசிவது போலத் தோன்றினாலும்.. உண்மையில் கோயிலின் முதல் தளத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாகவே தண்ணீர் கசிகிறது" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா வேறு சில முக்கிய பாயிண்டுகளை தெரிவித்துள்ளார். அதாவது, "நான் இங்கே தான் அயோத்தியில் இருக்கிறேன். முதல் தளத்தில் இருந்து மழைநீர் கசிந்துள்ளது. கட்டுமான பணிகள் இன்னும் முடியாததே இதற்குக் காரணமாகும். அதேநேரம் மழை பெய்தால் தண்ணீர் தானாக வெளியேறும் வகையிலேயே நாங்கள் கட்டுமானத்தை அமைத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications