காற்று மாசுக்கு 'பை பை' சொல்லும் உத்தரப் பிரதேசம்! முக்கிய திட்டத்தை அறிவித்தார் யோகி அதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசம் விரைவில் காற்று மாசு இல்லாத மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் உ.பியில் காற்று மாசை குறைக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். அதாவது மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க இந்த திட்டம் வழிவகுக்கிறது. அதேபோல மாநில சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு காரணமாக படிம எரிபொருளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே 'பசுமை ஹைட்ரஜன்' உற்பத்தி மையத்தை அம்மாநில அரசு அமைக்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.16,000 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி யைம் உத்தரப் பிரதேசத்தில் உருவாகி வருகிறது. இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் படி எரிபொருளான பெட்ரோல், டீசல் போன்றவைக்கு பதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால் காற்று மாசு குறைந்து உலகம் வெப்பமயமாதல் தடுக்கப்படும்.
எனவே பசுமை ஹைட்ரஜனில் மாநில அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை-2023க்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், பல ஆறுகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி, நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியாளராக உ.பியை மாற்றலாம். எனவே மத்திய அரசின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்தை கூர்ந்து கவனித்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications