பெரும் வளர்ச்சியை நோக்கி உ.பி பால்வளத்துறை! அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் வளரும் என யோகி நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில ஆண்டுகளில் பால்வளத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பால்வளத்துறை குறித்து பேசிய அவர், "அடுத்த சில ஆண்டுகளில் இத்துறை பெரிய அளவில் வளர்ச்சியை எட்டும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில அரசு பால்வளத்துறையை மேம்படுத்த ரூ.31 கோடியை ஒதுக்க இருக்கிறது. ஏற்கெனவே கால்நடை இனங்களை மேம்படுத்துதல், பால் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு மாட்டு இனங்களின் மக்கள்தொகையை அதிகரிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பணியை மாநில அரசு செய்து வருகிறது. இப்படி இருக்கையில், 'நந்த் பாபா' பால் இயக்கத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களுக்கான விரிவான செயல் திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதன்படி 'முதலமைச்சர் சுதேசி பசு ஊக்குவிப்புத் திட்டம்' மற்றும் 'முதலமைச்சர் முற்போக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம்' ஆகிய இரண்டிற்கும் கணிசமான ரூபாய் 10 கோடியும், 'நந்தினி கிரிஷக் சம்ரிதி யோஜனாவிற்கு' 11 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, யோகி அரசாங்கம் 2,500 உள்நாட்டு பசு மையங்களை நிறுவவும், கால்நடை துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 8,000 விருதுகளை விநியோகிக்கவும், 35 பால்பண்ணைகளை அமைக்கவும் உத்தேசித்துள்ளது. பால்வளத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றியை தரும் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறை பெரிய அளவில் வளரும் எனவும் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications