குவியும் புதிய முதலீடுகள்.. ஹோலியில் இரட்டை மகிழ்ச்சி! உ.பி குறித்து யோகி ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரப் பிரதேசத்தில் புதிய முதலீடுகள் குவிந்து வருவதாக யோகி ஆதித்யதநாத் கூறியுள்ளார்
லக்னோ: ஹோலி பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்திருப்பது இரட்டை மகிழ்ச்சி அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல தொழில் வளர்ச்சி, மருத்துவம் மற்றும் கல்விக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்திற்கு புதிய முதலீடுகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. இவ்வாறு முதலீடுகள் செய்யும் நிறுவனங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது இளைஞர்களின் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

பெர்ஜர் பெயிண்ட்ஸ் உற்பத்தி ஆலையானது ஹர்டோய் நகரில் புதியதாக தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக வீடியோ கால் மூலம் பங்கேற்றிருந்த யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை திறக்க வேண்டும். திறமையான மனிதவளத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
இப்படியான முதலீடுகள் மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. நாட்டில் அதிக தொழில்துறை முதலீடுகள் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறி வருகிறது. மறுபுறும் இளைஞர்கள் திறன்களை வளர்த்தெடுக்க மாநிலம் முழுவதும் சுமார் 150 ஐடிஐ கல்வி நிறுவனங்கள் டாடா டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. இது எதிர்காலத்தில் திறமையான மாணவர்களை உருவாக்கும். அதேபோல ஹர்டோய் நகரில் திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். இவையனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. ஆனால் 2017ம் ஆண்டுக்கு முன்னர் மாநிலத்தில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அப்போதை அரசு முழித்துக்கொண்டிருந்தது.

இதனை பாஜக தலைமையிலான அரசு உடைத்தெறிந்தது. நாங்கள் நடத்திய உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு ஏராளமான முதலீடுகளை மாநிலத்திற்கு கொண்டு வந்தது. மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் புந்தேல்கண்ட் ஆகிய பகுதிகளில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. ஆனால் தற்போது இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமான முதலீடுகள் குவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடி வெளி ஊர்களுக்கோ, மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்திற்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்த அதிகரித்து வருகிறது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications