சமரசத்திற்கு இடமில்லை.. வளர்ச்சி மட்டும்தான் ஒரே இலக்கு! நலத்திட்டங்களில் அதிரடி காட்டும் யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசம் வளர்ச்சியில் சமரசம் செய்துகொள்ளாது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு முந்தைய அரசுகள் செய்ய முடியாத விஷயங்களை பாஜக அரசு சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், "மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் எந்த விதத்திலும் சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, "கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாத சாதனைகளை பாஜக அரசு செய்திருப்பதை எப்படி மறுக்க முடியாதோ அதேபோல இந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளையும் மறுக்க முடியாது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடந்துக்கொண்டிந்தது. மாஃபியாக்கள் தலையிடாத தொழில்களே இல்லை. அனைத்திலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.
ஆனால் இன்று, இந்த மாஃபியாக்கள் தங்கள் உயிருக்காக அரசாங்கத்திடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கழுத்துகளில் வழக்குப்பதிவின் விவரங்கள் அடங்கிய பலகைகளை மாட்டிக்கொண்டு திரிந்துக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் இவர்கள் மீதான பிடியை இறுக்கியிருக்கிறது. இந்த அரசு 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்கிற தாரக மந்திரத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள் சமரசத்தை விட வளர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எங்கள் கொள்கையின் வெளிபாடுதான். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக சொல்வதெனில் முன்னெப்போதையும் விட இந்த பட்ஜெட் கூட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பெரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க முடியும். அதேபோல சிறு குறு நிறுவனங்களும் பெருமளவு பயனடையும். அதாவது 'பித்தளை' பொருட்கள் வணிகத்திற்கு பெயர் பெற்ற இடம் மொராதாபாத்தான் என்பது மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தெரியும்.
கடந்த காலத்தைவிடவும் பாஜக ஆட்சி காலத்தில் இங்கு பித்தளை வணிகம் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் மாநிலத்திற்கு மட்டும் தெரிந்த பெயர் தற்போது சர்வதேச அளவில் அறியப்பட்டதற்கு காரணம் பாஜக அரசின் கொள்கைதான். நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், எங்களுக்கு சமரசத்தைவிட வளர்ச்சிதான் முக்கியமானது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications