கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்.. மத்திய அரசை பாராட்டிய உ.பி முதல்வர்
லக்னோ: மத்திய அரசின் உதவியால் சிறு குறு கிராமங்களிலிருந்த விளையாட்டு வீரர்கள் தற்போது சர்வதேச அடையாளத்தை பெற்றிருக்கின்றனர் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் நிதி குறித்து அவர் மத்திய அரசை பாராட்டியுள்ளார்.

"கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 3,000 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50,000 உதவி வழங்கப்படுகிறது, இது பயிற்சி, உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற செலவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது மாநிலத்தின் அன்னு ராணி, பருல் சவுத்ரி மற்றும் சுதா சிங் ஆகியோரின் திறமைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும். விளையாட்டு ஒவ்வொரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானதாகும். விளையாட்டில்தான் வாழ்க்கை குறித்த சில விஷயங்களை புரிந்துக்கொள்கிறோம்.
இன்று முழு நாடும் விளையாட்டு வீரர்களைப் போல் சிந்திக்கிறது. விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது முதலில் தேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் பணயம் வைத்து நாட்டுக்காக விளையாடுகிறார்கள். இப்படியான அர்ப்பணிப்பு காரணமாக நாடும் ஒரு பெரிய இலக்குடன் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பங்கும் பாரதத்தை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கியமானது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அந்த துறையை வளர்த்து வருகிறது. இதனால்தான் சிறு குறு கிராமங்களில் இருந்த விளையாட்டு வீரர்கள் கூட தற்போது சர்வதேச அடையாளத்தை பெற்றிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications