Sri lanka Crisis: 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அகதிகளாகும் இலங்கை மக்கள்.. தமிழகத்தில் தஞ்சம்!
மதுரை: இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் அங்குள்ள தமிழர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு தஞ்சமடைந்துள்ளார்கள். அவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்த 8 குழந்தைகள் உள்பட 16 பேரை இந்திய கடலோர காவல் படை மீட்டது.
Recommended Video

1980 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட போது தமிழர்கள் அகதிகளாக தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 107 அகதிகள் முகாம்களில் 60 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அது போல் தமிழகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 30 ஆயிரம் பேர் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு வருவாயை தரும் தொழில்கள் சுற்றுலாவும் தேயிலை ஏற்றுமதியும்தான். இதில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. அது போல் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருவதால் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

தேயிலை அதிகம்
இலங்கையிலிருந்து தேயிலையை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதன்மையாக உள்ளது. இதனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடு
அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் அவை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றிற்காக மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் பணிக்குச் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதால் பலரால் காசு கொடுத்து உணவை வாங்க முடியவில்லை. இதனால் எல்லாவற்றையும் விட குறைந்த விலைக்கு விற்கப்படும் பிரட்டை சாப்பிட்டு வருகிறார்கள்.

பட்டினி
பலர் அதை கூட வாங்க முடியாத நிலையில் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார சூழலை சமாளிக்க முடியாதவர்கள் அண்டைய நாடுகளுக்கு தஞ்சமடைந்துள்ளார்கள். ராமேஸ்வரம், தனுஷ்கோடி அருகே 8 குழந்தைகள் உள்பட 16 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

3 மடங்கு விலை உயர்வு
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ஒரு குடும்பத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு பறி போய்விட்டது. பால், பிரட் பாக்கெட்டின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துவிட்டது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கும் 2 கி.மீ. தூரத்திற்கு மேல் வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அது போல் குடிநீரை சேமிக்கவும் நீண்ட வரிசை உள்ளது. சிலிண்டர், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஒரு வேளை உணவை கூட சமைத்து சாப்பிட முடியாத சூழல் உள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications