இடைவிடாமல் 51 தண்டால் எடுத்த ஆர்என் ரவி.. 73 வயதிலும் வியக்க வைத்த ஆளுநர்.. மதுரையில் அசத்தல்
மதுரை: 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று மதுரையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 10,000 மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த ஆளுநர் ஆர்என் ரவி தனது 73 வயதிலும் இடைவிடாமல் 51 தண்டால் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.
இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது 11வது சர்வதேச யோகா தினமாகும். நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு உள்பட நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று மாணவ-மாணவிகள் யோகா செய்தனர்.

மதுரையில் வேலம்மாள் குளோபல் பள்ளி ஏற்பாடு செய்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று பங்கேற்றார். 10,000 மாணவர்களுக்கு மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று யோகா செய்தார்.
வழக்கமாக ஆளுநர் ஆர்என் ரவி கோட்சூட் அணிந்திருப்பார். இன்றைய யோகா நிகழ்ச்சியில் அவர் டிராக்சூட், வெள்ளை நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றார். யோகா செய்த பிறகு ஆளுநர் ஆர்என் ரவி மாணவர்கள் மத்தியில் இடைவிடாமல் தண்டால் (Push-Ups) எடுத்தார். இடைவிடாமல் 51 தண்டால்களை எடுத்து ஆளுநர் ஆர்என் ரவி அசத்தினார். இதனை பார்த்த மாணவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் பயன் குறித்து விளக்கி பேசினார்.
ஆளுநர் ஆர்என் ரவி தண்டால் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. ஆளுநர் ஆர்என் ரவிக்கு தற்போது 73 வயது ஆகிறது. அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆர்என் ரவி இயற்பியல் பாடப்பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார். அதன்பிறகு பத்திரிகை துறையில் பணியாற்றினார்.
1976ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியானார். கேரளா கேடரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அங்கு 10 ஆண்டுகள் வரை பணியாற்றினார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். சிபிஐயில் பணியாற்றினார். சுரங்க மாஃபியாக்கள் உட்பட Organised criminals பிரிவில் தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பணியாற்றினார். 2012ல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு 2014ல் ஜாயிண்ட் உளவுத்துறை கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு 2018 ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நாகலாந்து, மேகாலயா ஆளுநராக செயல்பட்டார். இப்போது தமிழக ஆளுநராக நீடித்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications