Tamilnadu என எழுதுவதை THAMIZHL NAADU என ஆங்கிலத்தில் மாற்றி எழுத கோரி ஹைகோர்ட் கிளையில் வழக்கு!
மதுரை: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் Tamilnadu என எழுதுவதற்கு பதில் THAMIZHL NAADU என எழுத உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இம்மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடி கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தமிழ் மொழியின் சிறப்பு ழ கரம்தான். ஆனால் ஆங்கிலத்தில் Tamilnadu என்றே எழுதுகிறோம்.
ஆகையால் சிறப்பு ழ கரத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் இனி ஆங்கிலத்தில் THAMIZHL NAADU என எழுத உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனுவை எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் போது வட இந்தியர்களுக்கு சிறப்பு ழகர உச்சரிப்பு வராது என சுட்டிக்காட்டினர். ஆனால் மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் தற்போதைய வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரங்களில் THAMIZHL NAADU என்றே எழுதப்படுகிறது.
பிற மாநிலத்தவருக்காக நமது தமிழின் ழகர சிறப்பை இழக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து இம்மனுவை பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.