ஈரோடு இருக்கட்டும்.. தென் மாவட்டங்கள் முழுவதும் பறக்கும் ‘தாம்பூல தட்டுகள்’.. என்ன விஷயம் தெரியுமா?
தென் மாவட்டங்கள் முழுவதும் அதிமுகவினரின் வீடுகளுக்கு தாம்பூல தட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் 51- ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழாவை பிப்ரவரி 23-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணமும் ஒன்று. இதற்காக, தென் மாவட்டங்கள் முழுவதும் அதிமுகவினருக்கு தாம்பூலத் தட்டோடு அழைப்பிதழ் கொடுத்துள்ளார் உதயகுமார்.
கடந்த ஆண்டு 120 ஜோடிகளின் திருமணங்களை நடத்தியது போல் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் இந்தாண்டு 51 ஜோடிகளின் திருமண விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழோடு தாம்பூலத் தட்டுகளும் அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் சென்றுள்ளது. மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுமைக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார் ஆர்பி உதயகுமார்.
தென் தமிழ்நாட்டில் ஓபிஎஸ்ஸுக்கு மாற்றாக ஆர்பி உதயகுமாரை முன்னிறுத்தும் விதமாகவே அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், திருமண நிகழ்வு மூலம் தென் மாவட்டங்கள் முழுமைக்கும் தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்று வருகிறார் உதயகுமார்.

51 ஜோடிகளுக்கு திருமணம்
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மற்றும் கட்சியின் 51-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.குன்னத்தூரில் 51 ஜோடிகளுக்கு சமத்துவ திருமண விழா அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறுகிறது. இதில் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினியின் திருமணமும் நடைபெற உள்ளது.

ஈரோடு + மதுரை
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கின் இண்டு இடுக்கெல்லாம் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதேசமயம், தனது மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளின் திருமண விழாவுக்கான ஏற்பாடுகளிலும் வேகம் காட்டி வருகிறார்.

உதயகுமார் மகள் திருமணம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் திருமணம் மதுரை டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா திருக்கோவில் மணி மண்டபத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உதயகுமாரின் மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

பத்திரிக்கை
இந்த திருமண விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமானோர் பங்கேற்க இருக்கின்றனர். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பேரின் பெயர்களையும் திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளார் ஆர்பி உதயகுமார். இந்த திருமண அழைப்பிதழ்கள், தமிழ்நாடு முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தாம்பூலத் தட்டு
இந்த திருமண அழைப்பிதழோடு தாம்பூலத் தட்டு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த தாம்பூலத் தட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஆர்பி உதயகுமார் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் வரை தாம்பூலத் தட்டோடு திருமண பத்திரிக்கை வழங்கப்படு வருகிறது.

பிரம்மாண்டம்
பிரமாண்டமான முறையில் மதுரையில் 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர்பி உதயகுமார், தனது மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுவதும் கட்சியினருக்கு தாம்பூலத் தட்டுகள் வழங்கி அழைப்பு விடுத்துள்ளது அதிமுகவினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்ஸின் செல்வாக்கைச் சரித்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் உதயகுமாருக்கு, இந்த பிரமாண்ட திருமண விழா நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்கிறார்கள் ர.ரக்கள்.












Click it and Unblock the Notifications