ஓபிஎஸ் அரசியல் அஸ்தமனம்.. மதுரையில் செல்லூர் ராஜூ அதிரடிப் பேட்டி
மதுரை: "தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான்; அதில் அதிமுகதான் 'பாஸ்'" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜையை செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ஓ பன்னீர்செல்வம் சகாப்தம் முடிந்தது
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, திமுக அரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்".
தேர்தல் நெருங்குவதால் திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "முதல்வர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயத்தால் தூக்கம் வரவில்லை. அதனால்தான் பொதுமக்களுக்குப் பணப்பலன்களை அள்ளி வீசுகின்றனர். இலவச பட்டா தருவதாகக் கூறி வெறும் காகிதங்களை வழங்குகிறார்கள். சாலைப் பணிகளையும் புதிய திட்டங்களையும் இப்போது அவசர அவசரமாக அறிவிப்பது மக்களை ஏமாற்றவே," என்றார்.
மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு திமுகவில் பதவி வழங்கப்படுவது, அந்த கட்சியின் சீனியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்
மதுரை சம்பவம் சாட்சி
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலே அது அதிமுக தலைமையிலான கூட்டணிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால், இந்த கூட்டணிக்கு அதிமுகதான் 'பாஸ்'. மதுரையில் நடந்த பொதுக்கூட்டமே அதற்கு சாட்சி. 108 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வந்தது அதிமுகவின் செல்வாக்கைக் காட்டுகிறது," என்றார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு , "முடிந்துபோன அத்தியாயம்" என்றார். அதிமுக படுதோல்வி அடையும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறித்த கேள்விக்கு, செல்லூர் ராஜூ காரசாரமாகப் பதிலளித்தார்: "ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. இனி அவருக்குத் தோல்வி மட்டும்தான் மிச்சம். ஆரம்பத்திலிருந்தே அவர் திமுகவை ஆதரித்துத்தான் பேசிக்கொண்டிருந்தார். அதைச் சகித்துக்கொண்டுதான் கட்சியில் வைத்திருந்தோம். இப்போது அவரே திமுகவிடம் ஓடிவிட்டார். இவரைப் போய் தமிழக மக்கள் முதல்வராக்கினார்களே எனப் பொதுமக்கள் இன்று வேதனைப்படுகிறார்கள் என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது சாடல்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையைப் 'பச்சோந்தி' என விமர்சித்த செல்லூர் ராஜூ, திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுகையில், "2G ஊழல் நடந்தபோது காங்கிரஸை விமர்சித்த திமுக, இன்று அந்தக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு அடிமையாகச் செயல்படுகிறது," என்றார். மேலும், அதிமுகவின் சிறு செய்திகளைப் பெரிதுபடுத்தும் ஊடகங்கள், திமுகவின் தவறுகளைச் சுருக்கிக் காட்டுவதாகத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications