யாருக்கு வெற்றி? ஓட்டு போட வந்த மு.க.அழகிரி கொடுத்த சூசக பதில்!
மதுரை: மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சட்டமன்ற தேர்தலில் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்களித்த பிறகு, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மு.க.அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.வி.எஸ். நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி வாக்களித்தார். வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களம் சூடாக இருக்கிறது, வெயிலும் அதிகமாக உள்ளது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்" என்று கருத்து தெரிவித்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார் மு.க.அழகிரி. எனினும் தனது வாக்குரிமையை அவர் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் செலுத்தி வருகிறார். வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்ற கேள்விக்கு, "வாக்களித்த எல்லோரும் என் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன் என்று சொல்லப்போகிறார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன்." என்றார்.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "தெரியவில்லை, நான்தான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே, யார் வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம் என்று. ஒன்றும் புரியவில்லை. என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். அவ்வளவுதான். தேர்தல் களம் மிகச் சூடாக இருக்கிறது. வெய்யிலும் அதிகமாக இருக்கிறது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை." எனத் தெரிவித்தார்.
முக.அழகிரியின் மகள் கயல்விழி, சமீபத்தில் ஒரு பேட்டியில், "ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், எங்க அப்பாவை ஓரங்கட்டி 15 வருஷம் ஆகிவிட்டது" என தன்னுடைய சித்தப்பா முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய தந்தையை திமுகவில் சேர்த்துக் கொள்ளாதது பற்றி வருத்தமாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஏப்ரல் 23) பதிவாகும் வாக்குகள் வரும் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications