போக்குவரத்து விதிமீறல்.. அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”.. கொந்தளிக்கும் ஆர்பி உதயகுமார்!
மதுரை: போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை என்ற பெயரில் தமிழக அரசு பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது வருத்தமான செய்தி. கடந்த ஆண்டில் மட்டும் 11,419 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைந்துள்ளனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சட்டம் மக்களை பாதுகாக்க தான். சுதந்திரம் எல்லை மீறும் போது சட்டத்தின் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கான பாதுகாப்பதற்கான சட்டம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது.
என்னது இபிஎஸ் வாழ்கவா? எந்த ***வேணா இருந்துட்டு போ! பசும்பொன்னில் விரட்டப்பட்ட மாஜி ஆர்பி உதயகுமார்?
பொருளாதார சுரண்டல்
கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் வேதனை குரல் எழுப்பி வருகிறனர். தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடமைக்காக பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில், வாகன விபத்துகளை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டலை மக்களிடத்தில் தமிழகம் முழுவதும் செய்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் பாதிப்பு
இன்றைக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்று சாமானிய இளைஞர்கள் மாத சம்பளம் வாங்குகிறார்கள். வாகனத்தில் லிப்ட் கேட்டவர் ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்தினால் வாகன ஓட்டுனருக்கு அபதாரம் விதிக்கப்படுகிறது. லைசென்ஸ் இல்லையென்றால் ரூ. 5000, எல்எல்ஆர் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதெல்லாம் இன்றைக்கு ஊடகங்களில் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் இளைஞருக்கு ரூ.22,000 அபராதம் விதித்தால் எப்படி அபராதம் செலுத்த முடியும்.
பொருளாதார சுரண்டல்
அரசு மிகப்பெரிய கட்டமைப்பு வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளை செயல்படுத்துவதில் எந்த மாற்று கருத்து இல்லை. புதிய சட்டம் உருவாக்குவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அரசு செய்ய வேண்டிய பணிகளை தவறவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளது. இந்த இரண்டரை கோடி இருசக்கர வாகனத்திற்கும் அரசு அபராதம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா? இது மக்களை அச்சுறுத்தும் வேலை இல்லையா இது?
பகல் கொள்ளை
அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்க கூடாது. இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக ஒரு பொருளாதார சுரண்டலை ஏவிவிட்டு இருக்கிற மிகப்பெரிய தாக்குதலாகும். ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும், அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும், நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
மக்களை பாதுகாக்கின்ற வழியாக இருக்க வேண்டுமே தவிர, புதை குழியில் தள்ளுவதாக அமைந்து விடக்கூடாது. ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியாமல் எத்தனை தற்கொலைகளை பார்த்து நாம் வேதனை அடைகிறோம். அரசு கட்டமைப்புகளை மேம்படுத்திடவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும். ஆனால் அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அபாயகர கட்டணமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.