பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு... தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்கிறது... ஸ்டாலின் பேச்சு
மதுரை: இடைத்தேர்தலில், வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தென்பரங்குன்றம், கூத்தியார்குண்டு, நேதாஜி நகரில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தற்போது தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 22 பேர் இருப்பதாகவும், 22 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றார். அதனால் தான் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு, மேலும் 3 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மோடி பேசியது தவறுதான்..தனியாளாக எதிர்த்த தேர்தல் அதிகாரி.. என்ன நடந்தது தேர்தல் ஆணைய விசாரணையில்?
வெற்றி செல்லாது
மேலும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் மறைந்தால் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் வரவில்லை என்றும், அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்தே தேர்தல் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொய் சொல்லி வெற்றி
சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர். இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்காகத்தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளேன் என்றும் கூறினார்
தயாராகி விட்டார்கள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளதால் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் தற்போது எங்களுக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள் எனவும் பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். கேபிள் கட்டணம் குறைக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எடப்பாடி ஆட்சி அகற்றப்படும்
எப்படியாவது தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், தேர்தல் முடிவு வந்தவுடன் மத்தியில் மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.