பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை விவசாயியை போலீஸ் எஸ்.ஐ இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சுடப்பட்ட மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகன் மணிகண்டன், பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 7-ல் ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சில போலீசார் சீருடை அணியாமல் எங்கள் வீட்டிற்கு வந்து மணிகண்டனை உடன் அழைத்துச் சென்று, பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா எனப் பார்க்க கூறியுள்ளனர்.
மணிகண்டன் மரம் ஏறும் போது சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார். இதனை அங்க நின்றிருந்த நான் மற்றும் எனது பேத்தி ஆகியோர் தட்டிக்கேட்டோம். எங்களை போலீசார் மிரட்டினர். மணிகண்டன் மரத்தில் இறங்கி வந்த போது அவரை சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டனின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளூர் போலீஸார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே என் மகன் போலீஸாரால் சுடப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றவும், அதுவரை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்." எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications