அனைத்து சட்டக்கல்லூரியிலும் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும்.. மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
மதுரை: தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லுாரிகளிலும் அம்பேத்கரின் உருவ படத்தை கட்டாயம் வைக்க சட்டக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தேனி சட்டக் கல்லுாரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் படித்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அம்பேத்கரின் உருவப் படத்தை கல்லுாரி முதல்வரின் அலுவலக அறையில் வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் நடவடிக்கை
மேலும் தமிழிலும் பாடம் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். அதோடு முதல்வருக்கு எதிராக அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சசிக்குமாரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்தும், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும் சசிகுமார் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த மனு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சசிக்குமாரே ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதோடு சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறினார். அதேநேரத்தில் அரசு வழக்கறிஞர் வாதாடுகையில், கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கரின் படம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரச்சனைக்கு முடிவு காண
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறுகையில், ‛‛ நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்களில் சிலரை தற்போது ஜாதிய அடையாளத்திற்குள் சுருக்கிவிட்டனர். மனுதாரர் நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது எனது முன்னிலையில் கல்லுாரி ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுதாரர் வன்முறையில் ஈடுபடாமல் மன்னிப்பு கேட்டுள்ளார். 2 வாரங்களாக அவர் வகுப்பில் பங்கேற்க அனுமதிக்காத நிலையில் இனி துன்பத்தை அனுபவிக்க தேவையில்லை. இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். மனுதாரருக்கு எவ்வித களங்கமும் ஏற்படுத்தக்கூடாது.
அம்பேத்கர் படம் வைக்க உத்தரவு
அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். அம்பேத்கர் சட்ட மாணவருக்கும் உந்து சக்தியாக இருக்க முடியும். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் வைக்க சட்டக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். அம்பேத்கரின் படம் எனது அறையின் சுவர்களில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். விடுபட்டுள்ள இதை விரைவில் சரி செய்ய தீர்மானித்துள்ளேன்.
ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவு
வழக்கு ஒன்றில் அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் நல வாரிய அறக்கட்டளைக்கு வழங்கி அதனை பட்டியல் பிரிவு சட்டக்கல்லுாரி மாணவர் நலனிற்கு செலவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டேன். அதனை இந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது'' என உத்தரவு பிறப்பித்தார்.