கோபாலபுரத்தை சொன்னால் செந்தில் பாலாஜிக்கு ஏன் கோபம் வருது? பாஜக அண்ணாமலை கேள்வி
மதுரை: கோபாலபுரத்தை சொன்னால் செந்தில் பாலாஜிக்கு ஏன் கோபம் வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் கூறுகையில் தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி, பெருநிறுவனங்களுக்கான ஆட்சியாக மாறிவிட்டது.
பிஜிஆர் ஒப்பந்தம் விவகாரத்தில் எனக்கு பதில் சொல்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆட்சேபனையில்லா சான்றிதழ் (NOC) கடந்த இரு ஆண்டுகளாக கிடைக்கவில்லை என அமைச்சர் பொய் சொல்கிறார்.

என்ஓசி
ஆனால் அந்த சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக ஆதாரம் உள்ளது. இது லாபம் ஈட்டும் நிறுவனம் இல்லை. 2011 ஆம் ஆண்டு மேட்டூர் திட்டத்தில் 22 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனம் வருமான வரித் துறை நடவடிக்கைக்கு உள்ளானது. 33 கோடி மட்டுமே வைத்துள்ள இந்த நிறுவனத்திற்கு 4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதுதான் எனது கேள்வி.

பின்னணி
இதன் பின்னணி என்னவென்றால் ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டது என்பது தான். கோபாலபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்று வருபவர்கள் யார் என விசாரித்ததால் தெரியும். இதை தெரிவித்தால், செந்தில் பாலாஜிக்கு ஏன் கோபம் வருகிறது. இது திமுக ஆட்சியின் மெகா ஊழலின் துவக்கம். இது மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அடுத்தடுத்த துறையில் இது போன்ற ஊழலை நாம் எதிர்பார்க்கலாம்.

மின்வெட்டு
மின்வாரியத்தில் நடக்கும் இது போன்ற விவகாரத்தால் தமிழகம் மீண்டும் ஒரு மெகா மின்வெட்டை சந்திக்கும். இதுகுறித்து ஆதாரத்துடன் நான் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளேன். நேர்மையான ஆட்சி என கூறிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து ஒரு நபர் கமிஷன் அமைத்து அவர் விசாரணைக்கு உத்தரவிடுகிறாரா என பார்ப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தட்டி கேட்கும் பாஜக
மேலும் என் மீது பொய்யாக அவதூறு வழக்கு தொடர்ந்தாலோ இல்லை கைது செய்தாலோ அதை நான் சந்திக்க தயாராக உள்ளேன். ஊழலை எப்போதும் பாஜக தட்டிக் கேட்கும் என்றும் அவர் கூறியிருந்தார். தமிழகத்தில் விரைவில் மின் வெட்டு என்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications