மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம
மதுரை: தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை உருவாக்கி வரும் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' (We The Leaders) இயக்கம், இப்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது.
டிஜிட்டல் தளத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயக்கம், கிராமப்புற மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் 'நேரடி உறுப்பினர் சேர்க்கை' (Physical Enrolment) திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலையுடன் பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இயக்கத்தை கிராமப்புறங்களுக்கு எப்படி கொண்டு செல்வது, உறுப்பினர் சேர்க்கையை எவ்வாறு துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்வது என்பது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றன. தற்போது வரை 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் இணையதளத்தில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் டிஜிட்டல் இயக்கங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பாக பார்க்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இருப்பதால் டிஜிட்டல் பதிவு எளிதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் நிலைமை வேறுபட்டது. பலருக்கு ஆண்ட்ராய்டு மொபைல்கள் இல்லை. ஆன்லைன் பதிவு முறைகள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. இந்த சவால்களை சரிசெய்யவே புதிய உத்தி வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வலர்களை களமிறக்கி, தற்காலிக உதவி மையங்களை (Help Centres) அமைத்து நேரடி பதிவுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பழனி கனகராஜ் இது குறித்து கூறுகையில், "கிராம மக்கள் எளிதாக இயக்கத்தில் இணைய வசதி செய்ய வேண்டும். தொழில்நுட்பம் தெரியாதவர்களுக்கு நேரடி உதவி அளிப்போம். ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் குழுவினர் செயல்படுவார்கள்" என்றார்.
மேலும், தற்போதைய OTP அடிப்படையிலான பதிவு முறைக்கு இணையாக 'மிஸ்டு கால்' (Missed Call) முறையும் அறிமுகப்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அடிப்படை மொபைல் போன் வைத்திருப்பவர்களும் ஒரு மிஸ்டு கால் மூலம் உறுப்பினராக முடியும். இது கிராமப்புற மக்களுக்கு மிகவும் எளிதான வழியாக அமையும்.
உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடுகள், போலி பதிவுகள் அல்லது ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்கனவே OTP மூலம் பதிவானவர்கள் மிஸ்டு கால் முறையில் மீண்டும் பதிவு செய்ய முடியாது. இதனால் உறுப்பினர் எண்ணிக்கை துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் பராமரிக்கப்படும் என நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிய பிறகு, அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக பாஜகவின் முக்கிய முகமாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் அண்ணாமலை பக்கம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இயக்கம் வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல் மேடைப் பேச்சுகள், தேர்தல் பிரச்சாரம் அல்லது அதிகார லாபங்களை நோக்கமாகக் கொள்ளவில்லை. மக்கள் நலன் மட்டுமே இலக்கு என்பதை அண்ணாமலை தெளிவாக அறிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து, தீர்வுகளை நோக்கி மக்களை திரட்டும் களப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தளத்தில் 17 லட்சம் உறுப்பினர்களுடன் வேகமாக வளர்ந்து வரும் 'வி தி லீடர்ஸ்' இயக்கம், கிராமப்புறங்களிலும் வேரூன்றினால் தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மக்கள் இயக்கமாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications