"இன்னும் பிரச்சினை முடியல.." அலறவிட்ட அரிசி கொம்பன்.. ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு! என்ன மேட்டர்
மதுரை: தமிழக கேரள எல்லையில் வசித்த கிராம மக்களை அலறவிட்ட அரிசிக் கொம்பன் யானை காட்டில் விடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் காட்டு பகுதியை தொடர்ந்து அழித்து வருகிறார்கள். இதனால் விலங்குகளின் இருப்பிடங்கள் தொடர்ந்து குறைந்தே வருகிறது.
முன்பு பரந்து விரிந்து இருந்த காடுகள், இப்போது சிறு சிறு பகுதிகளுக்கு சுருங்கிவிட்டன. இதனால் வனவிலங்குகள் காடுகளை தாண்டி மனிதர்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் போக்கு அதிகரித்தே வருகிறது. இதனால் அடிக்கடி மனித மிருக மோதல்களும் நடக்கிறது.

குறிப்பாக யானைகள் இதுபோல அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுகிறது. ஏனென்றால் யானைகள் எப்போதும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும். அவை பல தலைமுறையாக அந்த குறிப்பிட்ட பாதையில் பயணிக்கும். இப்போது புதிது புதிதாக முளைக்கும் கட்டிங்கள் யானைகளின் இந்த நடமாட்டத்தை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாகாகவே யானைகள் எதிர்பாராத விதமாக காட்டு பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன.
சில நேரங்களில் இப்படி நகர்ப்பகுதியில் வரும் ஒரு சில யானைகள் ரொம்பவே வன்முறையாகவும் நடந்து கொள்கின்றன. அப்படி கேரள எல்லை கிராமங்களை அலறவிட்ட யானை தான் அரிசி கொம்பன். இந்த யானை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், பல நேரங்களில் இது விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களை நாசம் செய்வதையும் வாடிக்கையாக இருந்து வந்தது.
கேரளா மாவட்டம் இடுக்கியில் சுற்றி திரிந்த இந்த யானையை கேரள வனத்துறை அதிகாரிகள் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த ஏப். 30ஆம் தேதி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். இருப்பினும், அந்த யானை, கடந்த மாதம் திடீரென தமிழக வப்பகுதியில் நுழைந்தது. கடந்த மாதம் இந்த யானை மணலாறு, மேகமலை வனப்பகுதியில் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் கம்பம் பகுதியிலும் நுழைந்தது.
இந்த யானை ஏற்கனவே பலரை கொன்றுள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர்.. யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முதலில் யானை போக்கு காட்டியே வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த யானையை மயக்க ஊசி போட்டு வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அரிசிக் கொம்பன் யானையை நெல்லை களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி களக்காடு பகுதியில் யானையை விடும் நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து யானையை திட்மடிட்டபடி அங்கே விட்டனர். இதற்கிடையே அரிசிக் கொம்பான் யானை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதாவது அரிசி கொம்பன் யானையை களக்காடு பகுதியில் விடக் கூடாது என்றும் கேரளா வனத்துறையிடம் யானையை ஒப்படைக்க வேண்டும் என முறையிட்டனர். கேரளாவை சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர் முறையிட்டார். இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
களக்காடு சரணாலய பகுதியில் ஏற்கனவே மனித மிருக மோதல் அதிகமாக இருக்கும் நிலையில், இங்கே அரிசி கொம்பனை விட்டால் அது சில மணி நேரத்தில் மீண்டும் கீழே வந்துவிடும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications