அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை அடக்கிய கார்த்திக்.. கார் பரிசளித்த அமைச்சர்கள்
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளர் கார்த்திக்கிற்கும் கார் பரிசளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. 10 சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது.

சுற்றுக்கு தலா 25 வீரர்கள் வீதம் 250 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப்போட்டியில் வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். பல காளைகள் தொட்டுப்பார் என்று முட்டி தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடின.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ஆகியோர் கார் சாவியை பரிசளித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக் இந்த ஆண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார்.
தொட்டுப்பார் என்று சொல்லி களத்தில் நின்று விளையாடிய கார்த்தி என்பவரின் காளை முதலிடம் பிடித்தது. காளையின் உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயமடைந்தனர். 20 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மாட்டுப்பொங்கல் பண்டிகை தினமான நாளைய தினம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதே போல வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.












Click it and Unblock the Notifications