முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை! பசும்பொன்னை சின்னாபின்னமாக்க ஒரு கும்பல் திட்டம்! முருகன் ஜி பகீர்!
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதித் தலைவர் அல்ல என்றும் அவர் ஒரு தேசியத் தலைவர் எனவும் பாரதிய பார்வார்டு பிளாக் தலைவர் முருகன் ஜி தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரை குறுகிய ஜாதி வட்டத்துக்குள் அடைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் தேவர் நினைவிடத்துக்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதை யாரும் நிர்ணயிக்கக் கூடாது என்றும் கூறிய முருகன் ஜி, தேவர் நினைவிடம் பொதுச்சொத்து என்றார். 8,000 நாட்கள் தேச விடுதலையே முக்கியம் என்று வாழ்ந்த தலைவனை இயக்கத்தின் பால், சாதியின் பால் பிரித்து பசும்பொன்னை சின்னாபின்னமாக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்றும் அந்த திட்டத்தை உடைத்து தேவர் ஒரு தேசியத் தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவுக்கு எப்படி துணை நின்றோமோ அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை நிற்க வேண்டும் என முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாரதிய பார்வார்டு பிளாக் தலைவர் முருகன் ஜி, உண்மையான தேச பக்தர்களும், தேவரின் தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணி திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் வருகையால் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றும் எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என்று இடைஞ்சல் கொடுப்பவர்களும், பிரச்சனை செய்பவர்களும் தேவர் பெருமகனாரின் சினத்தால் காணாமல் போய்விடுவார்கள் என்றார்.
முருகன் ஜி இவ்வாறு பேட்டிக் கொடுத்த போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் உடனிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியிடமோ, ஆர்.பி. உதயகுமாரிடமோ காசு வாங்கிக் கொண்டு தாம் இப்படி பேசவில்லை என்றும் முருகன் ஜி திடீர் விளக்கம் அளித்தார். தாங்கள் ஒன்றும் அரசியல் விபச்சாரிகள் இல்லை என்றும் தன்னை பற்றி விமர்சிக்கும் பலர் தாம் சிறைசென்றக் காலத்தில் பிறந்திருக்கக் கூடமாட்டார்கள் எனவும் முருகன் ஜி அனல் கக்கினார்.
மொத்தத்தில் சசிகலா, டிடிவி தினகரன்,ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சூசகமாக இந்தப் பேட்டியின் மூலம் விமர்சித்தார் பாரதிய பார்வார்டு பிளாக் தலைவர் முருகன் ஜி.












Click it and Unblock the Notifications