அதிர்ச்சி.. டெல்லியில் பாஜக முன்னிலை.. காங்கிரஸ் - ஆம் ஆத்மி செய்த தவறு என்ன? திருமாவளவன் பேட்டி!
மதுரை: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியை தருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 9 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வந்த நிலையில், தற்போது அதிஷி முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இதனால் டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக 42 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த முன்னிலை மாறாமல் தொடர்ந்து வந்தால், 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்து வரலாறு படைக்கும். ஏனென்றால் டெல்லியில் பெரும்பான்மையை பெற 37 தொகுதிகள் தேவை.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி கட்சி இந்த அளவிற்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் என்றால், அது தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டும்.
நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்கிறதா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களின் ஈகோ பிரச்சனையை தள்ளி வைத்துவிட்டு நாட்டை, மக்களை காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனால் டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை போல் திமுக மிக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications