மிரள வைத்த மதுரை மக்களின் போராட்டம்.. 5,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதி அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மக்கள் நேற்று நடத்திய பேரணி அனைவரையும் மிரள வைத்தது. இந்த பேரணியில் பங்கேற்ற சுமார் 5,000 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி சுற்று வட்டார பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு பெரியளவில் போராட்டம் வெடித்தது. டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி பேரணி நடத்தினர்.
நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலையில் இருந்து நடைபயணமாகவும், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களிலும் பேரணியாக மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட கிளம்ப முயன்றனர். அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடைபயணம் தொடங்கினர்.
அவர்களை மாங்குளம் பிரிவில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணியாக சென்ற நிலையில் வெள்ளரிப்பட்டி சிக்னல் அருகில் இரும்பு தடுப்புகள் மூலமாக காவல்துறையினர் மீண்டும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் வாகனங்களில் பேரணியாக தமுக்கம் மைதானத்துக்கு வந்தனர். காலை 9 மணிக்கு பேரணியாக கிளம்பிய மக்கள், 5 மணி நேரம் பயணித்து பிற்பகலில் மதுரைக்குள் வந்து சேர்ந்தனர். மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட அனுமதி மறுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமுக்கம் மைதானம் திருச்சி - மதுரை பிரதான சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தூக்கி வீசி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்த பொதுமக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல விவசாய சங்கம் மற்றும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு, போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய இந்த பிரமாண்ட பேரணி மதுரையையே மிரள வைத்தது.
இந்நிலையில், மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக, மதுரை தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications