மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது சிபிஐ!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் காலம் கோரப்பட்டது. டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த ஜூன் 28 ஆம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் 5 தனிப்படை காவலர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள், யாருடைய உத்தரவின் பேரில் அஜித் குமாரை விசாரணை செய்தீர்கள்? அஜித் குமாரை அடித்து துன்புறுத்தியது ஏன்? காயமடைந்த அஜித் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமாரின் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன், கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அஜித் குமார் மீது நகை திருட்டுப் புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில், வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் மரணித்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் எனத் தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை சிபிஐக்கு வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications