வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் 60 வயது தம்பதி! மருத்துவ அதிகாரிக்கு கோர்ட் உத்தரவு
மதுரை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் 60 வயது தம்பதிக்கு தகுதி சான்றிதழை வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழை 4 வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழி வாடகைத் தாய் முறை ஆகும். இந்த வாடகைத் தாய் முறையில் கூட பொருளாதார ரீதியாக குழந்தை பெற்று கொடுக்கும் சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்கவே இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய வாடகைத் தாய் சட்டத்தின்படி இந்தியாவில் வாடகைத் தாய் செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு தகுதி சான்றிதழை பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். வாடகை தாயும் பெற வேண்டும், யாருக்கு அவர் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாரோ அவர்களும் பெற வேண்டும்.
அதாவது வணிக ரீதியான வாடகைத் தாய் முறையை தடை செய்யவே இந்த சான்றிதழ் முறை கொண்டு வரப்பட்டது. அதிலும் வயது, நிபந்தனைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த சான்றிதழை பெற பெண்ணுக்கு 23 முதல் 50 வயது வரையும் ஆணுக்கு 26 வயது முதல் 55 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த 60 வயது தம்பதி, இவர்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் என் மனைவிக்கும் 1984-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பல ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை.
மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தொடர்ந்து சிகிச்சை பெற்றோம். ஆனாலும் எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை. இதனால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்தோம்.
இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு 60 வயது என்பதால் எங்களுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கான தகுதி சான்றிதழை வழங்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி மனுதாரர் தந்தையாக வேண்டும் என விரும்புகிறார். இதற்கு இந்த தம்பதிக்கு வயது உள்ளிட்ட தகுதி இருக்கிறதா என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. எனவே வாடகைத்தாய் ஒழுங்குமுறை சுகாதார சேவை இணை இயக்குநர் 4 வாரத்தில், அந்த தம்பதிக்கு உரிய தகுதி சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications