மதுரை சித்திரை திருவிழா! மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் கள்ளழகர்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. வைகை ஆற்றில் தவளை வடிவில் தவம் செய்த மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்க, கள்ளழகர் இங்கு எழுந்தருளும் சிறப்புமிக்க தருணம் இது. இது மதுரையின் ஆன்மிக பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகும்.
பழங்காலத்தில் நாரத முனிவரின் சீடரொருவர், அழகர்மலைக்கு வடக்கே வைகை ஆற்றில் நீருக்கடியில் தவம் செய்தார். துர்வாச முனிவர் அவரைச் சந்திக்க வந்தபோது, ஆழ்ந்திருந்த முனிவர் அவரைக் கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாசர், 'நீ தவளையாக மாறுவாய்!' என சாபமிட்டார்.

தவளையாக மாறிய முனிவர், தன் தவறை உணர்ந்து துர்வாசரிடம் மன்னிப்புக் கோரினார். அவரது வருத்தத்தைக் கண்ட துர்வாசர், 'வைகை ஆற்றில் தவமிரு. கள்ளழகர் மதுரைக்கு வரும்போது உனக்குச் சாப விமோசனம் அளிப்பார்' என அருளினார். இந்த ஐதீக நிகழ்வே சித்திரைத் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது.
கள்ளழகர் தனது தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக அழகர்மலையிலிருந்து மதுரைக்கு வருவதாக ஐதீகம். வழியில், திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து கோபத்துடன் வைகை ஆற்றில் இறங்கும் காட்சி நடைபெறும். பின்னர், வைகையின் நடுவே உள்ள தேனூர் மண்டபத்திற்கு அவர் எழுந்தருளுவார்.
அங்கு தவளை உருவில் காத்திருக்கும் மண்டூக முனிவருக்குக் காட்சி தந்து, அவருக்கு சாப விமோசனம் அளிப்பார். பின்னர், முனிவருக்கும் பக்தர்களுக்கும் தசாவதாரக் காட்சியையும் அழகர் அளிப்பார் என்பது ஐதீகம். இந்தச் சிறப்புமிக்க வைபவம் இன்று மதியம் 12.00 மணிக்குத் தொடங்கி விமர்சையாக நடைபெற்றது.
சேஷ வாகனத்தில் வண்டியூர் வந்த கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அழகர் மலையில் இருந்து 5 நாள் பயணமாக மதுரை வந்த கள்ளழகர், நேற்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.












Click it and Unblock the Notifications