திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு திருவிழாவிற்கு அனுமதி.. தர்காவிற்கு முக்கிய கட்டுப்பாடு
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவார்கள். இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு 2026ம் ஆண்டு ஜனவரி 6ல் நடக்க உள்ளது. இதற்கு திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்து.
மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக கருதப்படும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த மலையில் இன்னொரு இடத்திடில் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. அதேபோல் மலையின் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.

இந்த சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம் ஆகும். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி ஆடுகளை எடுத்துச் செல்ல முயன்றதாக, முஸ்லிம் அமைப்பினரை, சட்டம் ஒழுங்கு பொருட்டு காவல் துறை தடுத்து நிறுத்தியது.
அப்போது மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம் தான் என கூறியும் போலீசார் அப்போது அனுமதி மறுத்தனர். தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழாவும் கந்தூரி விழாவும் நடத்தப்படுவதாகக் கூறியும் அவர்களுக்குக் காவல் துறை அனுமதியளிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஆடு கோழிகளை பலியிடக்கூடாது என இந்து அமைப்புகளும், வழக்கமான நடைமுறை தான் முஸ்லிம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்த சர்ச்சை ஒருபுறம் எனில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு ஏற்ற மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மறுத்து வருகிறது.
இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவிற்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 21ல் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்றத்திற்கான ஊர்வலம் நடக்க இருக்கிறது . இதற்கான அமைதிக் கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவஜோதி தலைமையில் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் உதவி ஆணையாளர் சசி பிரியா, தாசில்தார் கவிதா, தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் 2026 ஜனவரி 6ம் தேதி நடக்க உள்ள சந்தனக்கூடு திருவிழா, 2025 டிசம்பர் 21ல் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்ற நிகழ்வுக்கு, கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் திருவிழாவினை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. புதிய நடைமுறைகளை ஏற்படுத்தவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிகளை வெடித்தலோ கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் தர்கா நிர்வாகத்தினர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications