கஜா.. புயல் நிவாரணத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
Recommended Video

மதுரை: கஜா புயலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 50 பேர் வரை இறந்துள்ளனர். ஆனால் லட்சக்கணக்கான தென்னை, மா, வாழை, முந்திரி மரங்கள் அடியோடு வீழ்ந்து விட்டன. ஏராளமான கால் நடைகளும் இறந்துள்ளன. வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் அழகுமணி என்பவர் ஒரு முறையீட்டை இன்று வைத்தார். நீதிபதிகள் சசிதரண், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு காலையில் ஆஐரான அவர் இதுதொடர்பாக வைத்த கோரிக்கை:
புயல் நிவாரணப் பணிகள் மந்தமாக நடக்கின்றன. அதை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும். இந்த புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட வேண்டும். அதேபோல வீழ்ந்த மரங்கள், பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசுகள் தர உத்தரவிட வேண்டும். முப்படையினரையும் களம் இறக்கி புயல் நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று அழகுமணி கோரினார்.
இதை அவசர வழக்காக நீதிபதிகள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்தனர். விசாரணைக்குப் பின்னர் தமிழக அரசுக்கு சில கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர். கஜா புயலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. புயல் பாதித்த பகுதிகளில் பால், குடிநீர், மின்சாரம் கிடைக்கிறதா என்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்கள் வருகிற வியாழக்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தப் பொருட்கள் கிடைக்க உடனடியாக வழி வகை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அடுத்து புயல் பாதித்த பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனரா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications