காலத்திற்கு ஏற்ப மாறனும்..பட்டினப்பிரவேசம் பற்றி பட்டென்று பதில் சொன்ன சு.வெங்கடேசன்
காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தான் ஆக வேண்டும். மனிதரை மனிதர் சுமக்கும் அடிமைத்தன முறையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும் என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை: மடத்தின் சடங்குகளை விட சட்டமே மேலானது என்றும் அதற்கு மடாதிபதிகள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சந்நியாசி தர்மங்களை எல்லாம் மடாதிபதிகள் நிஜமாகவே பின்பற்றுகிறார்களா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம் . இந்த மடம் 16ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இம்மடத்தில் ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

பட்டினப்பிரவேசம்
2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.
அதே நேரம் பட்டின பிரவேச தடைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆன்மீகவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் மனம் குளிரும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சு.வெங்கடேசன் எம்.பி
நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்துக்கு உட்பட்டு பட்டா வழங்க சாத்தியமுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பல்லக்கு சேவை
பல்லக்கு விவகாரத்தில் மதுரை ஆதினத்தின் சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், " "மடத்திற்கென பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆனால், மடத்தின் சம்பிரதாயங்களை விட மேலானது அரசியல் சாசன சட்டம். அதற்கு தங்களை மடாதிபதிகள் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சன்யாசி தர்மம்
சன்யாசி தர்மப்படி, நடந்து தான் செல்ல வேண்டும், பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும். அந்த சன்யாசி தர்மங்களை எல்லாம் நிஜமாகவே மடாதிபதிகள் பின்பற்றுகிறார்களா?

எல்லோரும் மாற வேண்டும்
காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தான் ஆக வேண்டும். மனிதரை மனிதர் சுமக்கும் அடிமைத்தன முறையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும். அதை தான் அரசு சொல்கிறது. அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை. பழமைகளை மீறி ஜனநாயகம் வெல்லும்" என்றார்.












Click it and Unblock the Notifications