அமலாக்கத் துறை விசாரணையில் அழுத்தமா? ED எடுத்துச் சென்ற ஆவணங்கள் என்ன?.. அமீர் பரபரப்பு விளக்கம்
மதுரை: உங்கள் வீட்டிலிருந்து அமலாக்கத் துறையினர் என்ன கொண்டு சென்றார்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார்.
இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

நீங்கள் அனைவரும் கேட்பது போல் என்னிடம் என்சிபி 11 மணி நேரம் விசாரணை நடத்தியது உண்மைதான். என் வீட்டிலும் அலுவலகத்திலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியதும் உண்மைதான். அமலாக்கத் துறை சோதனை நேற்று இரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே எந்த விசாரணைக்கும் தயார் என்பதை நான் சொல்லி வருகிறேன். அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஆனால் என்ன எடுத்துச் சென்றார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
வழக்கு நிலுவையில் இருக்கும் நான் எதையும் சொல்ல முடியாது. வழக்கு விசாரணை நேர்மையாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் அந்த விசாரணைக்கு பின்னால் ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து கூற எனக்கு கால அவகாசம் கொடுங்கள். என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இறைவன் மிகப் பெரியவன் என்பதுதான் என்னிடம் இப்போதைக்கு இருக்கும் வார்த்தை. எப்போதும் அதை சொல்லிதான் கடந்து செல்வேன். இப்போதும் கடந்து செல்கிறேன் என அமீர் தெரிவித்திருந்தார்.
பின்னணி என்ன?: டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.
உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
ஜாபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரி உள்ளிட்டோரின் பெயர்களை வாக்குமூலமாக தெரிவித்திருந்தாராம். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் போதை பொருள்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைத்தனர்.
அதன்பேரில் அமீர் உள்ளிட்டோர் தங்கள் வழக்கறிஞர்களுடன் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது அமீரிடம், " 2020-2023 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சொத்து கணக்கு ஆவணங்களையும் அந்த 3 ஆண்டு கால வங்கிக் கணக்கு தகவல்களையும் எடுத்துக் கொண்டு 5ஆம் தேதி ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (ஏப்ரல் 9 ஆம் தேதி) அமலாக்கத் துறையினர் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், இயக்குநர் அமீரின் வீடு அலுவலகம், பாசித் புகாரியின் வீடு, அலுவலகம் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமீர் வீட்டிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமீருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியதாக தெரிகிறது. இதற்கு அமீர் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications