அதிமுக - தேமுதிக இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? ராஜேந்திர பாலாஜி அளித்த பதில்
விருதுநகர்: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார். தேமுதிக எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது போல் தெரியவில்லை என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு மட்டுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த அறிவிக்க எந்த அவசரமும் தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.

இருப்பினும் தேமுதிக இரு முக்கிய கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாகவே விஜயகாந்த் குருபூஜை விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்தார். ஆனால் அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் முன் வைத்த டிமாண்ட் அதிர செய்தது.
பாமகவுக்கு நிகரான தொகுதி எண்ணிக்கை மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக சில காலங்களுக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரேமலதா விஜயகாந்த். திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதனை திமுக ஏற்றுள்ளது. இருந்தாலும் திமுக - தேமுதிக கூட்டணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேமுதிக கூட்டணிக்கு வருகிறதா என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த மாதிரியே தெரியவில்லை. அவர்கள் எங்கு பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. திமுகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் கொள்கை. அதற்காகதான் தேமுதிகவை தொடங்கினார். அதிமுக கூட்டணிக்காக யாரின் வாசலுக்கும் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
யார் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார். அதற்காக யாரிடமும் சென்று மடிப்பிச்சை கேட்கும் நிலையில் அதிமுக பலவீனமாக இல்லை. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி உள்ளது. இதனை எதிர்த்து திமுக கூட்டணி உள்ளது. களத்தில் இந்த இரு கூட்டணியும் தான் செயல்படும். மற்ற கட்சிகள் சிதறி ஓடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications