மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்
மதுரை: சட்டசபைத் தேர்தலில் மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 7 தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்களும், மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளனர். அதேபோல் மேலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் வேட்பாளர்கள் நேர்காணல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மதுரையில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 8 தொகுதிகளில் நேரடியாக களமிறங்க உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதன்படி திமுக வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்ய உள்ளார். பென் டீம் கொடுத்த ரிப்போர்ட், உளவுத்துறை ரிப்போர்ட் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை ஆகியவற்றை ஒப்பிட்டு வேட்பாளர்கள் தேர்வு நடக்கவுள்ளது.
இதனால் மேலூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியை சிபிஎம் கட்சிக்கும் கொடுக்க திமுக தயாராகி வருகிறது. அதேபோல் மதுரை மேற்கு தொகுதியை சிபிஎம் கேட்டு வருகிறது. ஆனால் மதுரை மேற்கு தொகுதியில் ஓராண்டுக்கும் மேலாக திமுக வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனால் செல்லூர் ராஜு வெல்லுவாரா என்ற கேள்வி உள்ளது.
அதேபோல் மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி போட்டியிடுவது உறுதி. அதேபோல் மத்திய தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது. திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வெற்றியின் அவசியம் குறித்து சபரீசன் நேரடியாகவே எடுத்து கூறியுள்ளார்.
இருந்தாலும் திமுக செயற்குழு உறுப்பினர் ஜெயராம், அவைத் தலைவர் பாலு உள்ளிட்டோர் சீட் வாங்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகின்றனர். மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு வந்தாலும், தளபதி மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
உசிலம்பட்டி தொகுதியை பொறுத்தவரை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் களத்தில் உள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பனும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இருப்பினும் இளமகிழனுக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திருமங்கலம் தொகுதியில் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனும், சோழவந்தான் தொகுதியில் மீண்டும் வெங்கடேசன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications