மதுரையை வன்முறை நகரமாக மாற்றிய திமுக... திரும்ப திரும்ப பெண்களை இழிவுபடுத்துகின்றனர் - மோடி விளாசல்
கண்ணகி, ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் வாழ்ந்த மண் மதுரை. திமுக தலைவர்கள் பெண்களை திரும்ப திரும்ப திரும்ப இழிவுபடுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை: மதுரை அமைதியான நகரம் அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில்தான் திமுகவினர் நடந்து கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கண்ணகி, ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் வாழ்ந்த மண் மதுரை என்று புகழ்ந்த பிரதமர் மோடி, திமுக தலைவர்கள் பெண்களை திரும்ப திரும்ப திரும்ப இழிவுபடுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி, ஆ. ராசா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து ஆ. ராசா விளக்கம் அளித்தும் திருப்தி அடையாத இந்திய தேர்தல் ஆணையம் 48 மணிநேரம் பிரசாரம் செய்ய ஆ. ராசாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவினர் பெண்களை மதிக்க தெரியாதவர்கள், இழிவுபடுத்துபவர்கள் என்று குற்றம் சாட்டினார். முதல்வரின் தாயை பழித்து பேசியவர்கள் என்று கூறிய மோடி தமிழக மக்கள் உங்களை கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

புண்ணிய பூமி மதுரை
இன்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மதுரையின் பெருமைகளைப் புகழ்ந்து பேசினார். தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது . புண்ணிய பூமியாக விளங்குகிறது என்றார்.
மதுரை அன்னை மீனாட்சி அருள் புரியும் பூமி. அழகர் பெருமாள் வீற்றிருக்கும் மண். கூடலழகர் வீற்றிருக்கும் மண். திருப்பரங்குன்றம் முருகன் வீற்றிருக்கும் மண். தமிழ்பண்பாட்டின் தொட்டிலாக மதுரை திகழ்கிறது. ஆன்மீக பூமியாகவும் திகழ்கிறது.

மண்ணின் பெருமை
தென் தமிழகத்தின் நடு நாயகமாக திகழும் மதுரை வீரம் விளைந்த மண் என்று குறிப்பிட்ட மோடி, உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வ.உ சிதம்பரனார், முத்துராமலிங்கத்தேவர் இமானுவேல் சேகரன், காமராஜர் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்றார்.

தமிழும் மதுரையும்
மகாத்மா காந்தியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். தமிழுக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மதுரை என்றால், தமிழ் சங்கம் இருப்பது நினைவுக்கு வருகிறது. தமிழ் இலக்கியம், பண்பாட்டையும் பாதுகாக்கிறவர்களை பாராட்டி வணங்குகிறேன் என்றார்.

மதுரை வீரன்
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. மதுரைக்கும் எம்ஜிஆருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திரைப்படங்களில், எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தவர்களில் டி.எம்.சவுந்திரராஜன் குரலை மறக்க முடியுமா என்று கேட்டார் மோடி.

மதுரை மேற்கில் எம்ஜிஆர் வெற்றி
1980ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சியை மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி கலைத்தது. அப்பொழுது தென் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தனர். மீண்டும் தேர்தல் நடந்தபோது மதுரை மேற்கு தொகுதியில் இருந்து எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அவர் பின்னால், பாறை போன்று மதுரை மக்கள் கடுமையாக நின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அமைதியை சீர்குலைத்த திமுக
திமுக காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மதுரை மக்கள் அமைதியை விரும்பிய போது அவர்களின் குடும்ப பிரச்னை காரணமாக மதுரையை வன்முறை நகரமாக, கொலைநகராமாக மாற்றினார்கள் என்று குற்றம் சாட்டினார் மோடி.

திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவார்கள்
கண்ணகி, ராணி மங்கம்மாள், வேலுநாச்சியார் என இந்த மண்ணில் வாழ்ந்த பெண்கள் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். இந்த மதுரை மண்ணில் தான், பெண்களுக்கு அளிக்கும் மரியாதையை பார்க்கிறோம் என்ற மோடி திமுக தலைவர்கள் மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் திமுகவின் இயல்பு என்றும் மோடி கூறியுள்ளார்.

மு.க அழகிரியை டச் செய்ய மோடி
தாராபுரத்தில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை பட்டத்து இளவரசர் என்று கூறி பேசினார். இன்றைக்கு மதுரை கூட்டத்தில் மு.க அழகிரியை டச் செய்துள்ளார். ஜெயலலிதா மதுரைக்கு வந்து பிரசாரம் செய்த போதும் அழகிரியை குறிப்பிட்டுதான் பிரசாரம் செய்வார். அதே பாணியில் இன்றைய பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications