திமுகவுக்கு சரியான எதிரி அதிமுக தான்; தானா சேர்ந்த கூட்டம் இது.. மதுரையில் செல்லூர் ராஜூ ஆவேசம்!
மதுரை: திமுகவுக்கு பின் தாங்கள் தான் என்று கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், எடப்பாடி பழனிசாமி கைகளே ஓங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோரை தன் பக்கம் இழுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக தனது தலைமையினை நிரூபிக்க போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தார். அப்போது அனைத்து மாவட்டங்களிலும் வரும் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மதுரையில் ஆர்ப்பாட்டம்
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கருப்புச் சட்டையுடன் செல்லூர் ராஜூ
இதில் மதுரை முனிச்சாலையில் கருப்பு சட்டை அணிந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்காக ரூ.30 கோடிக்கு அதிகமாகவும், பேனா நினைவு சின்னத்திற்காக திமுக அரசு ரூ.80 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களுக்கான சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வராத மின்சாரத்திற்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

பிரச்னைகள்
மதுரை மாநகராட்சிக்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரையில் உள்ள சாலைகள் அனைத்தும் பராமரிக்கப்படாமலே உள்ளது. மகளிருக்கான இலவச பேருந்துகள் குறைப்பு, மழைநீர் வடிகால்கள் இல்லாமல் இருப்பது ஆகியவை மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது.

தானா சேர்ந்தக் கூட்டம்
இவை அனைத்தும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவின் வெற்றிக்கான அறிகுறி. வாக்கு கேட்காமலேயே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, திமுகவுக்கு சரியான எதிரி அதிமுக தான். திமுகவுக்கு பின் நாங்கள் தான் என்று கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம். இது காசுக்காக கூட்டி வரப்பட்டக் கூட்டமல்ல. தானா சேர்ந்த கூட்டம் என்று ஆவேசமாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications