யார்னு தெரியுதா.. இந்த போட்டோ பாருங்க.. "எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க போல".. உதயநிதி பளிச்!
திமுக ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மதுரை: "இந்த கொளுத்துற வெயிலில் என்னை பார்க்க வந்திருக்கிறீங்க என்றால், நீங்கள் எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டீங்கன்னு அர்த்தம்" என்று உதயநிதி ஸ்டாலின் மதுரையில் பிரச்சாரம் செய்தார்... அத்துடன், அதிமுக, பாஜக அரசு மீதான விமர்சனங்களை முன்வைத்து திமுகவுக்காக வாக்கு சேகரித்தார்.
மண்டை பிளக்கும் வெயிலுக்கு நடுவில் பிரச்சாரம் அதற்கு மேல் சூடுபிடித்து கொண்டிருக்கிறது.. திமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக என நாலாபாக்கமும் சுழன்று சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் உதயநிதியின் பிரச்சாரமும் திமுகவுக்கு பலத்தை சேர்த்து வருகிறது.. செல்லும் இடமெல்லாம் கேஷூவலாகவும் அதே சமயம் பாயிண்ட் பாயிண்ட்டாகவும் உதயநிதி பேசுவதை கேட்க மக்கள் கூடுகின்றனர். மதுரையிலும் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.. அப்போது அவர் மக்களை பார்த்து பேசியதாவது

சட்டசபை
கொளுத்தும் வெயிலில் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள் என்றால், நீங்க ஒரு முடிவுக்கு வந்துட்டீங்கன்னுதான் அர்த்தம்.. எம்பி தேர்தலில் அமோக வெற்றி தேடி தந்தீங்க.. இடைத்தேர்தலிலும் வெற்றியை தந்தீங்க. அதுமாதிரி சட்டசபை பொதுத்தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வெற்றியை தேடி தரணும்.

கோபம்
இந்த 2 இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு நீங்கள் வெற்றி தேடித்தந்ததால் மோடிக்கு தமிழகம் மீது பயங்கர கோபம் இருக்கிறது.. அதனால்தான், அவர் ஜிஎஸ்டி வரி வகையில் நமக்கு தரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை இன்னும் தரவே இல்லை. இதை பற்றி கேட்டதற்கு நிதி நெருக்கடி என்று பொய் காரணம் சொல்றார்.. மோடி கொஞ்ச நாளைக்கு முன்னாடி 2 சொகுசு ஃபிளைட் வாங்கினார்.. அதுக்கு விலை எவ்ளோ தெரியுமா? 8,000 கோடி ரூபாய்.

ஃபிளைட்
தமிழகத்தில் இந்த 4 வருஷத்தில் மழை, வெள்ளம் வந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி நிவாரணத்தை தமிழக அரசு கேட்டது.. அதற்கு வெறும் ஆயிரம் கோடி மட்டுமே மோடி தருவதாக சொன்னார். இப்போதுகூட, தேர்தலை முன்னிட்டு தான் ரூ.500 கோடி தரப்பட்டுள்ளது.. அன்னைக்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ராத்திரி 11 மணிக்கு அறிவித்தாரே, அப்போ என்ன சொன்னார்? புது இந்தியா பிறக்கப்போகிறது என்று சொன்னார்தானே? அந்த புதிய இந்தியாவை நீங்க யாராவது பார்த்தீங்களா?

முதல்வர்
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் எடப்பாடி அடகு வைத்து விட்டார். இனியும் ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டையே வித்துடுவார்.. எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்று எல்லாருக்கும் தெரியும்.. நீங்க என்ன அவர் முதல்வரா வரணும்னா ஓட்டு போட்டீங்க? ஜெயலலிதா அம்மாவுக்குதானே போட்டீங்க? அப்பறம் இவர் எப்படி முதல்வர் ஆனார்.. தரையில் படுத்து ஊர்ந்து போய்தான்.. இங்க பாருங்க.. இந்த போட்டோவை.. எங்கே வெற்றி நடைபோடுது தமிழகம்? இந்த போட்டோ பார்த்தால் நல்லா தெரியும்.. சசிகலாவின் டேபிள், சேர்களுக்குதான் அது தெரியும்.

ட்ரீட்மென்ட்
காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், அவரது காலையும் வாரி விட்டார். இப்போது, நான் என்ன பல்லியா? பாம்பா?ன்னு கேட்கிறார்.. இதுவும் சசிகலாவுக்குத்தான் தெரியும்.. ஜெயலலிதா அம்மா எப்படி இறந்தாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.. 80 நாள் அப்பல்லோவில் ட்ரீட்மென்ட்டில் இருந்தார். நல்லா இருக்கார்ன்னுனே எல்லாரும் சொன்னாங்க.. இட்லியில் சட்னியை தொட்டு சாப்பிடறார், ஜூஸ் குடிக்கிறார்ன்னு அமைச்சர்களே சொன்னாங்க.. அப்பறம் செத்து போய்ட்டாங்கன்னு சொல்றாங்க.

ஜெயலலிதா
இந்தியாவிலேயே பெரிய ஆஸ்பத்திரி அப்பல்லோ... அங்கு நவீன வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் ஜெயலலிதா இருந்த 80 நாட்களும் அங்கு சிசிடிவி கேமரா வேலை செய்யலைன்னு சொல்றாங்க. இதுல என்ன மர்மம் இருக்கு? ஆனால் இப்போ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே ஒரு உண்மையை ஒத்துக்கிட்டார். என்னை மன்னிச்சிடுங்க.. ஜெயலலிதா நல்லா இருப்பதாக நாங்க எல்லாரும் பொய்தான் சொன்னோம்.. எங்களை அப்படி சொல்ல சொன்னாங்க என்று சொல்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி
மக்களின் உரிமையை தட்டிப்பறித்த மோடி மற்றும் அதிமுகவுக்கு தலையில் குட்டுப்போடும் நாள்தான் ஏப்ரல் 6. அன்னைக்கு நீங்க எல்லாரும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்... அன்னைக்கு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எல்லாரும் சொன்னாங்க.. ஆனால் இப்போ மதுரை சிட்டி, சட்னியாக மாறியிருக்கு என்றார்.












Click it and Unblock the Notifications