மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வு! மதுரை மாணவனுக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்! கொதித்தெழும் வெங்கடேசன்!
மதுரை: மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மதுரை மாணவர் ஒருவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பல்கலைக்கழகத்தில் சேர ஆசைப்பட்டது ஒரு குத்தமா என்கிற வகையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் யோசிக்க வைத்துள்ளது.
இதனிடையே இது தொடர்பான தகவல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு தெரிய வந்ததை அடுத்து, நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? எனக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு;

வெங்கடேசன் எம்.பி கடிதம்
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலை கழகம். திருவாரூரில்... அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி.

லட்சத்தீவில் தேர்வு மையம்
தேர்வு மையம் லட்சத் தீவில்... எப்படி மாணவர் போவார். கப்பலில் அல்லது விமானத்தில்... இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறும். இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்க என்று ஆலோசனை வேறு.

பதறிப் போய்
மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ... ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்... பணத்திற்கும் அலைச்சல்... உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று...தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் குழப்பங்கள்
மத்திய பல்கலைக்கழகத்தில் சேர ஆசைப்பட்டது ஒரு குத்தமா என்கிற வகையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்த தேர்வு மைய விவகாரம் யோசிக்க வைத்துள்ளது. இதேபோல் தான் நீட் உட்பட பல நுழைவுத் தேர்வு விவகாரங்களிலும் குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications