எம்.ஜி.ஆர். பணத்தில் படித்து பட்டம் வாங்கி அவரையே துரோகி என துரைமுருகன் பேசுவதா?செல்லூர் ராஜூ ஆவேசம்
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பணத்தில் படித்து பட்டம் வாங்கிவிட்டு அவரையே துரோகி என அமைச்சர் துரைமுருகன் பேசுவதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்ததாக திமுக அரசு மீது குற்றம் சாட்டி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அதிமுக சார்பில் மதுரை தினமணி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:

எம்.ஜி.ஆரை துரோகி என்பதா?
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் முயற்சியால்தான் தமிழகத்தில் 40,50 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது. அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்.ஜி.ஆரை துரோகி என கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் பக்தன்
நான் எம்.ஜி.ஆரின் பக்தன். சட்டசபையிலேயே இதனை சொன்னேன். இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட எம்.ஜி.ஆரின் ரசிகன் என்றுதான் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர். வியர்வையும் ரத்தமும் சிந்தி சம்பாதித்த பணத்தில் படித்து பட்டம் பெற்ற துரைமுருகன், எம்.ஜி.ஆரையே துரோகி என பேசுவது நியாயம்தானா? அவர் அப்படி பேசலாமா? தமிழகத்தில் எம்.ஜி.ஆர். புகழ் பாடாமல் அரசியல் நடத்த முடியாது. 34 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த எம்.ஜி.ஆர். குறித்து அவதூறாக பேச உங்களுக்கு மனம் எப்படி வந்தது?

எம்.ஜி.ஆர்.தான் காரணம்
இன்றைக்கு திமுக ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதற்கு வித்திட்டது யார்? உதயசூரியன் சின்னத்தை, திமுகவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர். இதை நான் சொல்லவில்லை. மறைந்த பேரறிஞர் அண்ணாவே சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை துரைமுருகன் துரோகி என்று சொல்லலாமா? இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

என்ன பிரச்சனை?
அண்மையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டத்தின் போது எம்.ஜி.ஆரை நம்பிக்கைத் துரோகி என அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். இதற்கு அப்போதே அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் செல்லூர் ராஜூ இந்த பிரச்சனையை கிளப்பிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications