நேற்று காஞ்சி, இன்று மதுரை... பரபரக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்! கிறுகிறுக்கும் ஷவர்மா கடைகள்
மதுரை: கேரளா மாணவி மரணத்தை தொடர்ந்து ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டனர்.
அதன் பின்னர் சுமார் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஷவர்மா கடைகளில் திடீர் சோதனை.. பாக்ஸை திறந்து பார்த்தால் அதிர்ச்சி.. என்னங்க இது? கவனம்!
பள்ளி மாணவி பலி
பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆம் படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உணவகத்தில் சாப்பிட்ட ஷவர்மாதான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆய்வு
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
10 கிலோ பழைய கறி
இந்த சோதனையில் 10 கிலோ பழைய சிக்கன் கறிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 கடைகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரத்தில் நேற்று ஆய்வு
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையிலான அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சென்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தரம் குறித்து பரிசோதனை
ஷவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கறியை அவர்கள் ஆய்வு செய்தனர். பழைய கோழி கறியை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி தரத்தை கண்டறிந்து வருகின்றனர்.
10 கடைகளுக்கு அபராதம்
கடைகளில் பாதுகாப்பில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தி ஷவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் இயங்கும் கடையில் பழைய கோழி கறியை பயன்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் ஆய்வுக்காக அனுப்பி இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.