மதுரைக்காரனாய் முதல்வர் ஸ்டாலின் அரசை இருகரம்கூப்பி வரவேற்க ரெடி.. சொல்வது செல்லூர் ராஜு
மதுரை: மதுரைக்காரன் என்ற முறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை கைகூப்பி வரவேற்க தயராக இருப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க..ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பி.டி.ஆர். சிலை அருகே நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில் பென்னி குவிக் வாழ்ந்த வீடு என்றும் இதனை இடித்து விட்டு கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்கள்.

பென்னி குவிக்-நூலகம் சர்ச்சை
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர். ஆனால் இந்த இடத்தில் பென்னி குவிக் வாழ்ந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பிரபல எழுத்தாளர்கள், தமிழக அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர். மேலும் இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது.
பென்னி குவிக் வாழ்ந்த வீட்டை இடித்து விட்டு நூலகம் அமைக்க கூடாது என்று அதிமுக, பாமக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஸ்டாலின் விளக்கம்
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு '' மதுரையில் பென்னிகுக் நினைவிடத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ' உறுப்பினர் செல்லூர் ராஜு ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக் கூடாது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், அதனை மாற்ற அரசு தயாராக இருக்கிறது. ஆனால் தவறாக சொல்லக்கூடாது" என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் பேசினேன்
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த செல்லூர் ராஜு கூறியதாவது:- கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே நேரத்தில் பென்னிகுயிக் வாழ்ந்து-மறைந்த இடத்தை இடித்து நூலகம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் பேசினேன்.

வரவேற்க ரெடி
5 மாவட்ட விவசாயத்திற்காக அணை கட்டிய பென்னிகுக் மதுரையில்தான் வாழ்ந்தார். மதுரையில் அவர் எங்கு வாழ்ந்தார்? என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவர் எங்கு வாழ்ந்தார்? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை கொடுக்கின்றபோது மதுரைக்காரன் என்ற முறையில் இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறேன் . இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications