கருகி கிடந்த உடல்..போலீசுக்கே பாதுகாப்பில்லை? மலைக்க வைத்த மதுரை கிரைம்.. நெல்லை அதிர்ச்சியே போகலை!
மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மதுரையில் காவல்துறை அதிகாரியின் பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் பகுதியில் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் வசித்து வந்தார் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வந்த போது மூன்று பேர் கொடூரமாக அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக், அக்பர் ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜாகிர் உசேன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது 36 சென்ட் இடத்தை சிலர் அபகரிக்க முயன்றதாகவும் இது குறித்த புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, தான் கொலை செய்யப்பட்டால் நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், நெல்லை மாநகர உதவி கமிஷனர் விஜயகுமார் தான் காரணம் எனக் கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மதுரையில் மற்றொரு காவல் அதிகாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈச்சநரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த வாலிபர் விருதுநகரை சேர்ந்த 36 வயதான மலை அரசன் என்பதும், இவர் சிவகங்கை காளையார் கோவில் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவரது மனைவி கடந்த ஒன்றாம் தேதி வாகன விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி குறித்த கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில்., மருத்துவமனை பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சிநெறி பகுதியில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடைக்கப்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மனைவியுடன் சென்றபோது அவரை யாரோ கொலை செய்ய விபத்து ஏற்படுத்திருக்கலாம் என்றும், மேலும் அவரது உடல் கிடைக்கப் பெற்ற இடமும் உடல் எரிக்கப்பட்ட இடமும் வேறு வேறு இடம் என்பதால் உயிரிழந்த மலையரசனின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்ட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினர் கொலையை மூடி மறைப்பதற்காகவே இதுபோன்று கூறி வருவதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை பகுதி வழியாக சிம்மக்கல் செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications