ஜல்லிக்கட்டு காளை ராமு மறைவு.. கரகாட்டம், ஒப்பாரியோடு இறுதி அஞ்சலி.! மதுரையில் நெகிழ்ச்சி
மதுரை: வீட்டில் பிள்ளை போல வளர்ந்த ஜல்லிக்கட்டு காளை இறந்ததால், அதற்கு மனிதர்களுக்குச் செய்வதைப் போலவே கரகாட்டம், தப்பட்டாம் கலைஞர்களுடன் ஒப்பாரி வைத்து அழுது இறுதிச் சடங்கு செய்த இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் , 48. விலங்குகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் ஜல்லிக்கட்டு காளை, குதிரை, ஆடு, சேவல், கோம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டுரக நாய்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ராமு என்ற 22 வயது காளை சமீப காலமாக உடல்நிலை குன்றிய நிலையில் இருந்தது. வட மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்த காளை, அதிகமான பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்தக் காளை நேற்று உடல் நலக்குறைவால் திடீரென இறந்தது. இதனால் வருத்தம் அடைந்த உரிமையாளர் தீபக், வீட்டில் ஒருவர் மறைந்தால் என்ன மாதிரியான துக்கம் அனுசரிக்கப்படுமோ அதை போன்று இறுதி சடங்குகள் செய்தார். மாடு வளர்ந்த கொட்டத்திற்கு வெளியே பந்தலிட்டு சேர்கள் போட்டு, துக்க வீட்டைப் போலவே ஏற்பாடுகள் செய்திருந்தார். மேலும், கரகாட்டம், தப்பாட்டத்திற்கும் ஏற்பாடு செய்ததோடு, சோகப் பாடல்களையும் ஒலிபரப்பினார். பெண்கள், மூதாட்டிகள் ஒப்பாரி வைத்தும் அழுதனர்.

அவரது நண்பர்கள் காளையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிளக்ஸ் பேனர் மற்றும் போஸ்டர்களையும் ஒட்டி இருந்தனர். அவரது உறவினர்கள் மட்டுமின்றி தேனி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களும், வட மஞ்சுவிரட்டு நடத்தும் ஏற்பாட்டாளர்களும் நேரில் வந்து காளைக்கு மாலை அணிவித்து, வணங்கி மரியாதை செய்தனர்.

பின்னர் காளை ஊர்வலமாக எடுத்து செய்யப்பட்டு, அங்குள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது அப்போது உரிமையாளர் தீபக், துயரத்தின் வெளிப்பாடாக மொட்டையும் அடித்துக் கொண்டார். இந்தக் காளையின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதற்கு செய்யப்பட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சி, நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications