ஜல்லிக்கட்டில் உயிரை பணயம் வைத்து வெல்லும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை? அமைச்சர் விளக்கம்
மதுரை: ஜல்லிக்கட்டில் முத்திரை பதிப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார். மேலும் உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் அவர் பதில் அளித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவையாகும்.

இதில் ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளையும் மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். அவர் கூறியிருப்பதாவது: அரசு விதிகளுக்குள்பட்டு இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் 1100 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் களமாடினர். இந்த முறை மொத்தம் 10 ரவுண்ட் வைக்கப்படுகிறது. 9 ரவுண்ட் வரை யார் அதிக மாடுகளை அடக்கினார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
ஒரு ரவுண்டில் பங்கேற்றவர்கள் மற்ற ரவுண்டுகளில் பங்கேற்க முடியாது. வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டரும், மாடுபிடி வீரர்களுக்கு காரும் வழங்கப்படுகிறது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், மாடு பிடி வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு வேலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மூர்த்தி கூறுகையில் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அவர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.
உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் என்பதே சட்டவிரோதம். எல்லாமே ஆன்லைனில்தான் பதிவு செய்யப்படுகிறது. என் பெயரில் மாடு இருக்கிறது என்றால் எனது பிஏ பெயரில் பதிவு செய்தால் அது ஏற்கப்படாது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் சேர்த்து 12,560 பேர் பதிவு செய்தனர். ஆனால் 3300 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 9 ஆயிரத்து சொட்சம் மாடுகளுக்கு சுற்றுலா துறை சார்பில் மதுரையில் அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் 9 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications