தமிழகத்தில் 18 மாதங்களில் உருவான வேலைவாய்ப்பு எவ்வளவு.. வெள்ளையறிக்கை கேட்பது யார் தெரியுமா?
மதுரை: தமிழக அரசு துறைகளில் புதிதாக 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 18 மாதங்களால ஆட்சியில் இருக்கும் திமுக, இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட முன்வருமா என்றும் சவால் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பொது சொத்துக்களை பாதுகாக்கவும் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்க படுவார்கள் என்றும், அரசு துறையில் புதிதாக 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், திமுக ஆட்சியமைத்த 18 மாதங்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த 18 மாத காலத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
திமுக அரசின் பொங்கல் பரிசு ஆயிரம் பத்தாது.. 5 ஆயிரம் கொடுக்கனும்.. ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தல்
ஆர்பி உதயகுமார் அறிக்கை
73,99,512 நபர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலி பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகளின் அனைத்தும் பட்டியல்களை கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி
இந்த நடைமுறையில் உள்ள பணியிடங்களுக்கு அதற்காக விண்ணப்பிக்கும் இளைஞர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கேற்ப தேர்வு முறைகளிலும் மாற்றுங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வு அட்டவணை
இன்றைக்கு இளைய சமுதாயத்தின் உடைய வேலைவாய்ப்பு தேடல் என்பது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியோடு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்து சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21, 85 ,328 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
காலி இடங்கள் விவரம் எங்கே?
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப் 2, குரூப் 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும் குரூப் 4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குரூப் ஒன் தேர்வில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் முதல் நிலை 2024 ஜூலை முதல் டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை காலி இடங்கள் என்ற விவரங்கள் இல்லாத ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக அரசு முன்வருமா?
திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. அது பகல் கனவாக இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.