மதுரையில் அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்... பிரியாணி விருந்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!
மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் நடைபெற்ற பிரியாணி விருந்தால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மதுரையில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வரும் சூழலில், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியே அதனை மீறும் வகையில் அமைந்துள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
முடியவே முடியாது.. பாக். தளபதியை சந்திக்க மறுத்த சவுதி சல்மான்.. சீனாவிற்கு விரையும் பாக் அதிகாரிகள்
இளைஞர் பாசறை
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான பரமசிவம் பொறுப்பேற்றது முதல் பாசறையை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். திமுக இளைஞரணிக்கு போட்டியாக அதிமுக இளைஞர் பாசறையில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பல மாவட்டங்களுக்கும் பயணித்து வருகிறார்.
அமைச்சர் உதயகுமார்
இந்நிலையில் மதுரை திருமங்கலம் தொகுதியில் நேற்று நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தை பெரியளவில் ஏற்பாடு செய்து அசத்தியிருந்தார் அமைச்சர் உதயகுமார். கட்சி நிகழ்ச்சிகள் எதுவாயினும் மாஸ் காட்டக்கூடியவர் உதயகுமார், அதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. சைக்கிள் பேரணி தொடங்கி பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கட்சியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதில் அவர் கில்லாடி.
சிக்கன் பிரியாணி
இதனிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து கொடுத்தார் அமைச்சர் உதயகுமார். இதில் தவறேதுமில்லை, அழைப்பையேற்று வந்தவர்களை விருந்தோம்பல் செய்வது பண்பாடு. ஆனால் கொரோனா காலத்தில் அதற்கென இருக்கும் கோட்பாடு கடைபிடிக்கப்பட்டதா என்பதே திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரின் கேள்வி.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மூச்சுக்கு முந்நூறு முறை அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்யும் முதலமைச்சரும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் பிரியாணி விருந்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு பஃபே முறையில் பரிமாறியதை தவிர்த்திருந்தால் சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம்.