அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..மதுரை, திண்டுக்கல்லில் பரபரப்பு
தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை: தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் இரு அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தனது எஸ்பிகே நிறுவனம் மூலம் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை சோதனை நான்கு நாட்கள் நடைபெற்றது.
தமிழகம் முழுதும் இரு அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொழில் சார்ந்த பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளைப் பயன்படுத்தியிருப்பதும், அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை மறைத்து காட்டியிருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகருக்குத் தொடர்புடைய இடங்களில் போலி ரசீதுகளைப் பயன்படுத்தி பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டியிருப்பதும், அதற்கு உண்டான ஆவணங்கள் மற்றும் பொய்யான பணபரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய அறைகளைப் பயன்படுத்தி வந்ததும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை மூலம் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம் இரு ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.