ஜல்லிக்கட்டு லீக் நடத்தக் கூடாது! குதிரை ரேஸ் போல் வியாபாரமாகிவிடும் ! மதுரை Dr சரவணன் முட்டுக்கட்டை
மதுரை: அரங்கத்தில் ஜல்லிக்கட்டு என்பது வியாபார நோக்கத்தில் மாறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பந்தய குதிரை வளர்ப்பு போல் மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கிறார் மதுரை டாக்டர் சரவணன்.
அதிலும் ஜல்லிக்கட்டு லீக் நடத்தப்பட்டால் ஜல்லிக்கட்டே முற்றிலும் வர்த்தகமாகிவிடும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அருகே நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்கவுள்ள நிலையில் இதனைக் கூறியுள்ளார்.

''கடந்த ஜனவரி 17-ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி அலங்காநல்லூர் - கீழக்கரை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள ஏறு தழுவுதல் அரங்கம் திறக்கப்படுவது குறித்தும், ஜல்லிக்கட்டு லீக் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் கூடிய தமிழர் தம் வாழ்வியல் சார்ந்த விளையாட்டு ஆகும். தமிழ் சமூகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை தமிழகத்தில் இந்த விளையாட்டு நடைபெற்று வருகின்றது. இதனை தமிழ் சங்க இலக்கியங்களும், சிந்து சமவெளி நாகரீகமும், தமிழகத்தில் கிடைத்த அகழாய்வு முடிவுகளும் நமக்கு தெரிய படுத்துகின்றன.
தமிழ் சமூகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரையின் சுற்று வட்டார பகுதிகளான அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அணைத்து வாடிவாசல்களுமே தமிழ் சமூகத்தின் இறை நம்பிக்கையோடு தொடர்புடையவை ஆகும். அந்த வாடிவாசல் வழியே கிராம தெய்வங்களின் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இவ்வாறாக தமிழ் சமூகத்தின் இறை நம்பிக்கையோடும் வழிபாட்டோடும் தொடர்புடைய ஒன்றாக உள்ளது. தமிழ் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல், இறை நம்பிக்கை, வழிபாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் தான் தமிழ் சமூகம் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி பெரும் புரட்சியில் ஈடுபட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்பொழுது எந்தவித தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.
இவ்வாறிருக்க அரங்கத்தில் ஜல்லிக்கட்டு என்பது வியாபார நோக்கத்தில் மாறக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு பந்தய குதிரை வளர்ப்பு போல் மாறும் அபாயம் உள்ளது. போல் ஜல்லிக்கட்டு லீக் நடத்தப்படும் போது பெரும் வர்த்தகமாக மாறும், மேலும் சூதாட்டங்கள் நடைபெறவும் சாத்திய கூறுகள் உள்ளன.
எனவே தமிழர்களது கலாச்சாரம், பண்பாடு, இறை நம்பிக்கை, வழிபாடு மற்றும் வாழ்வியலோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு போட்டியை வர்த்தக நோக்கில் அரங்க விளையாட்டாக மாற்றாமலும், ஜல்லிக்கட்டு லீக் எனும் பெயரில் போட்டிகள் நடத்தப்படாமலும் இருக்க வேண்டும் என்று தமிழ் இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் மண்ணின் கலாச்சாரம்,பண்பாட்டு பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் எழுத்தாளரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் ஜல்லிக்கட்டு லீக் குறித்தோ அரங்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறுவது குறித்தோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது, எனவே இனிமேலாவது தனது கருத்தை அவர் தெரிவிக்க வேண்டும் என்பதே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் விருப்பமாக உள்ளது.''












Click it and Unblock the Notifications