யோவ் கமிட்டி.. ஜல்லிகட்டை நிறுத்த வேண்டி இருக்கும்.. பாலமேட்டில் டென்ஷனாகி கத்திய கலெக்டர்
மதுரை: மதுரை பாலமேட்டில் இன்று விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியின்போது மேடையில் இருந்த மதுரை கலெக்டர் சங்கீதா திடீரென்று டென்ஷனாகி மைக்கில் வார்னிங் செய்தார். யோவ் கமிட்டி.. என்னயா வேலை பார்க்கிறீங்க.. ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

நேற்றைய தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடந்தது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் பிடித்தனர். ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். அதேபோல் காளைகள் சில வீரர்களை கொம்பால் முட்டி தூக்கி எறிந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5.45 மணிக்கு முடிவு பெற்றது.
இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார். வெற்றி பெற்ற பார்த்திபனுக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியால் மதுரை கலெக்டர் சங்கீதா டென்ஷன் ஆனார். இவர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மேடையில் இருந்து பார்த்தார். அப்போது வாடிவாசலில் இருந்து காளைகள் மீது வண்ண பொடி மற்றும் கொம்பில் மலர்மாலை சுற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி செய்யக்கூடாது என்று கலெக்டர் சங்கீதா கூறினார். ஆனாலும் தொடர்ந்து காளைகளின் கொம்புகளில் மலர்மாலை சுற்றப்பட்டு இருந்தது.
இதனால் டென்ஷனான கலெக்டர் சங்கீதா தனது கையில் இருந்த மைக்கில், ‛‛யோவ் கமிட்டி.. என்னயா வேலை பார்க்கிறீங்க.. ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டி இருக்கும். வாடிவாசலில் இருக்கும் காளைகள் உடலில் மாலை இருக்ககூடாது'' என்று கத்தியபடி கூறினார். இதையடுத்து கமிட்டியினர் வாடிவாசலில் காளை அவிழ்ப்போருக்கு அந்த தகவலை பாஸ் செய்தனர். அதன்பிறகு காளைகள் மலர்மாலை இன்றி வாடிவாசலில் பாய்ந்து வந்தன.
இதற்கிடையே தான் கலெக்டர் சங்கீதா ஜல்லிக்கட்டு கமிட்டிக்கு கொடுத்த வார்னிங் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications