விரைவில் நகைக்கடன் தள்ளுபடி.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி.. மக்கள் மகிழ்ச்சி
மதுரை: கடந்த ஆட்சியின் போது விவசாய கடன் தள்ளுபடிகளில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தவறு உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சசர் தெரிவித்தார்.
Recommended Video
தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர், தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

11500 கோடி இலக்கு
இந்த ஆய்வு கூட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவை மக்களுக்கு தடையின்றி, விரைவாக சென்று சேர்வதற்கு தேவையான ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க ஆணை இடப்பட்டு உள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மளிகை பொருட்கள்
2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த அரசு எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

விரைவில் அரசாணை
மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.

நிறைய புகார்கள்
கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்" இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications