மைக்கில் பேச தடை... திருமங்கலத்தில் மவுனப்பிரச்சாரம் செய்து புன்னகைத்த கமல்..!
மதுரை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மைக்கில் பேச போலீஸ் அனுமதி மறுத்ததால் திருமங்கலத்தில் மவுனப்பிரச்சாரம் செய்தார்.
தன்னை காண்பதற்காக கூடியிருந்த மக்கள் மத்தியில் கைகளை அசைத்து புன்னகைத்த அவர் மவுனமாக அந்த இடத்தை கடந்து சென்றார்.
மதுரை, திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார் கமல்.

சீரமைப்போம் தமிழகத்தை
சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் நேற்று முன் தினம் மதுரையில் பரப்புரையை தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல். அதிமுக அரசு மீது கமல் பாய்ந்ததோடு எம்.ஜி.ஆரின். தொடர்ச்சி தான் நான் எனத் தெரிவித்தார். இது அதிமுக தரப்பினரை கோபம் கொள்ளச் செய்தது.

விதிமுறைகள்
எம்.ஜி.ஆரை கமல் எப்படி உரிமைக் கோரலாம் என்றும் அவர் அண்ணா திமுகவின் சொத்து எனவும் அதிமுகவினர் எதிர்க்கருத்து கூறினர். மேலும், கமல் தொடர்ந்து அதிமுக அரசை பற்றி விமர்சித்து பேசத் தொடங்கியதால் அவரது பிரச்சாரத்துக்கு இடைஞ்சல்களும் அதிகரித்தன. இந்நிலையில் இன்று விருதுநகர் செல்லும் வழியில் மதுரை திருமங்கலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக கமல் தனது காரின் கூரை மீது நின்றார்.

மவுனப்பிரச்சாரம்
அப்போது அங்கு மைக்கில் பேச அனுமதி தர முடியாது என போலீஸ் கூறிவிட்டதால், அங்கிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து புன்னகைத்தவாறு சென்றார். கடந்த தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த முறை கமல் மிகவும் கவனமுடன் பிரச்சாரத்தை கொண்டு செல்கிறார்.

காரை நிறுத்தி
கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரை பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், தான் செல்லும் வழிகளில் தன்னைக் காணம் எங்கு கூட்டம் நின்றாலும் உடனடியாக காரை நிறுத்தி அவர்களை சந்தித்துவிட்டு செல்கிறார். கமலின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications